லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் : அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடாவும் தூதரகத்தை மூடியது
Jul 31 2014 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பெங்காசி பகுதியில் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 30 பேர் பலியாகினர். லிபியாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவும் அங்குள்ள தனது தூதரகத்தை முடியுள்ளது.
லிபியாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த மோம்மர் கடாஃபியின் சர்வாதிகார ஆட்சி, கடந்த 2011-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அன்று முதல் லிபியாவில், கடாஃபியின் ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜிண்டான் மற்றும் இஸ்லாமிய போராட்டக்குழுவினரிடையே, மோதல் முற்றி வருகிறது. திரிபோலி விமானநிலையம் ஜிண்டான் போராட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் இந்த விமானநிலையம் மீது இஸ்லாமிய போராட்டக்குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் பெங்காசி நகரின் மீதும் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெங்காசி நகர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 59 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிபியாவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பொதுமக்கள் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைநகர் திரிபோலியின் அருகே அமைந்துள்ள அல்பிரிக்கா எரிபொருள் கிடங்கு மீது, கிளர்ச்சியாளர்கள் ராக்கட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்கிருந்த 6 மில்லியன் லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் முயற்சியும் தோல்வியடைந்ததால், கட்டுக்கடங்காமல் அல்பிரிக் பகுதியில் தீ பரவி வருகிறது. இதனிடையே, தெற்கு திரிபோலியில் நடந்த தாக்குதலின்போது இருதரப்பினரும் ராக்கட் மற்றும் பீரங்கி மூலம் தாக்கிக்கொண்டனர். தொடர் தாக்குதல் காரணமாக லிபியாவில் மோசமான நிலைமை நிலவுகிறது. இவ்வாறாக, லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா மூடியது. துருக்கி மற்றும் ஐ.நா. சபையும் தங்களது தூதரக உறவை முறித்து கொண்டன. தற்போது, கனடாவும் தனது தூதரகத்தை மூடியுள்ளது. இந்தநிலையில், பெங்காசி பகுதியில் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 30 பேர் பலியாகினர். லிபியாவில் நிலவும் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக தாய்நாட்டிற்குத் திரும்ப வலியுறுத்தியுள்ளன.