ஈராக்கில், ISIS தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் குர்திஷ் படையினர் : ஜெர்மனியிலிருந்து ஆயுதங்கள் குவிகின்றன
Sep 27 2014 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கில், ISIS தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி வரும் குர்திஷ் இனப்படைகளுக்கு, ஜெர்மனி ஏராளமான ஆயுதங்களையும், தளவாடங்களையும் அனுப்பி வைத்துள்ளது. குர்திஷ் இனப்படைகளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்து, உண்மையான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, ISIS எனப்படும் தீவிரவாத அமைப்பினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அமைப்பை ஒழித்துக்கட்ட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஈராக்கில், ISIS தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி வரும் குர்திஷ் இனப்படைகளுக்கும், அரசுப்படைகளுக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்கப்படைகள் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், ISIS தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட குர்திஷ் இனப்படைகளுக்கு, ஜெர்மனியும் உதவ முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, பெருமளவிலான ஆயுதங்களையும், தளவாடங்களையும் விமானங்கள் மூலம், குர்திஷ் படைகளுக்கு அனுப்பிவைத்துள்ளது. இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணையை வழிமறித்துத் தாக்கக்கூடிய ஆயுதங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
இதனிடையே, உள்நாட்டுப் போரினால், சிரியாவிலிருந்து வெளியேறி அண்டை நாடான துருக்கியில் தஞ்சம் புகும் மக்களுக்கு உதவுவதற்காக, அந்நாட்டு எல்லையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.