இந்தோனேஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் : ஜோகோ விடோடோ புதிய அதிபராக தேர்வு
Jul 24 2014 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியாவின் புதிய அதிபராக ஜோகோ விடோடோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்தோனேஷியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
உலகில் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தோனேஷியாவில் இம்மாதம் 9-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. கடந்த 1998-ம் ஆண்டு இங்கு முடிவுக்கு வந்த சுகர்தோ சகாப்தத்திற்குப் பின்னர், மிகப் பெரிய பிரிவினையை வெளிப்படுத்திய தேர்தலாக இது அமைந்தது. சீர்திருத்தவாதியாக விளங்கிய ஜகார்த்தாவின் ஆளுநரான ஜோடோ விடோடோவும், முன்னாள் ராணுவ வீரரான பிரபோவோ சுபியன்டோவும் இந்தத் தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கினர். இருவருமே வெற்றி வாய்ப்பு தங்களுடையது என்று கூறிவந்தபோதிலும், விடோடோவிற்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, இறுதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தப் போட்டியிலிருந்து, தான் விலகுவதாக பிரபோவோ அறிவித்தார். விடோடோ அணியினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளைக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவில், ஜோடோ விடோடோவை வெற்றியாளராக அறிவித்துள்ளது. இவர் பிரபோவோவைவிட ஆறு சதவிகிதம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. முன்னாள் தளவாட ஏற்றுமதி தொழிலதிபரான விடோடோ, ஜகர்த்தாவின் ஆளுநராகப் பணியாற்றியபோது அவரது பொதுத் தொடர்பின் மூலம் பெற்றிருந்த ஏகோபித்த ஆதரவாளர்களின் வாக்குகள் மூலமே இந்த வெற்றி பெறப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்தோனேஷியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.