இஸ்ரேல் தாக்குதலில் காஸா பகுதி மின்நிலையம் கடும் சேதம் - மின் விநியோகம் அடியோடு பாதிக்கும் அபாயம்
Jul 29 2014 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஸா முனைப் பகுதியில் பாலஸ்தீன அரசுக்கு சொந்தமான ஒரே மின் நிலையம் இஸ்ரேல் டேங்குகளால் தாக்கப்பட்டு சேதமடைந்தது. இதனால் காஸா பகுதியில் மின் விநியோகம் அடியோடு பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
காஸா பகுதியில் பாலஸ்தீன அரசுக்குச் சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. அதன் மீது இஸ்ரேல் டேங்குகள் இன்று தாக்குதல் நடத்தின. டேங்குகளில் இருந்து வீசப்பட்ட குண்டுகள் வெடித்ததில், மின் நிலையம் சேதமடைந்தது. அதிலிருந்து எழுந்த கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்துகொண்டது. இத்தாக்குதலில் உயிர்ச்சேதம் பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இஸ்ரேல் ராணுவம் இச்சம்பவம் பற்றி கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக காஸா பகுதியில் வாழும் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்நிலையம் தாக்கப்பட்டதால் நிலைமை மேலும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.