காஸா பகுதியில் உயரமான கட்டடம் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் தொடர் குண்டுமழை பொழிந்து தகர்த்ததில் 20 பேர் காயம் - நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து புதிய யோசனை
Aug 26 2014 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஸா பகுதியில் உயரமான கட்டடம் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் தொடர் குண்டுமழை பொழிந்து தகர்த்ததில், 20 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டு, காஸாவில் அமைதி திரும்ப எகிப்து புதிய யோசனைகளை முன்வைத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் தாக்குதல்களை தொடங்கியது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் வசிப்பிடங்களில் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்தது. இதில், குழந்தைகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகினர். ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் தரப்பில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு காஸாவின் மேற்கு கரையில் உள்ள 2-வது உயரமான கட்டடத்தை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து தகர்த்ததாகவும், இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கட்டடம் அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், 49 நாட்களாக தொடரும் சண்டைக்கு நிரந்தர தீர்வுகாணும் பொருட்டு, எகிப்து புதிய யோசனைகளை முன்வைத்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து, இஸ்ரேல் - காஸா இடையே மூடப்பட்டுள்ள முக்கிய சந்திப்பு பகுதிகளை திறக்க வேண்டும் - காஸாவில் புனரமைப்புக்கு தேவையான பொருட்களையும், பாலஸ்தீன மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், சிக்கலான விவாரங்கள் குறித்து பின்னர் பேச்சு நடத்தலாம் என்றும் எகிப்து தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனையை ஹமாஸ் ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.