காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்
Jul 24 2014 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில், 100 குழந்தைகள் உட்பட பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியாவின் ஆதரவோடு நிறைவேறியுள்ளது.
காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த 8-ம் தேதி முதல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த கடலோரப் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். 17-வது நாளாக காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 100 குழந்தைகள் உட்பட இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 718-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தரைப்படை தாக்குதல் தீவிரமடைந்ததையொட்டி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து ஐ.நா. முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக, விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நேற்று பாலஸ்தீனம் கொண்டுவந்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு நிறைவேறியது. மொத்தம் 46 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மட்டுமே வாக்களித்தது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், இதற்காக, இரு நாடுகளும் அரசியல் உறுதிப்பாட்டுடன் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் பாலஸ்தீன இளைஞர்கள், இஸ்ரேல் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர். அப்போது கலவரத்தை கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவத்தினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதால் அப்பகுதியே புகைமூட்டமாகக் காணப்பட்டது. இதனிடையே, பாலஸ்தீன அதிபர் மாமோத் அப்பாஸ், பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிலிப்ஸ் ஹம்மோட்டை சந்தித்து பேசியுள்ளார். போர்நிறுத்தம் ஒன்றே இப்போதைய தலையாய தேவை என பிரிட்டன் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பாலஸ்தீன அதிபர் மாமோத் அப்பாஸ் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்கா திரும்பும் வழியில், எகிப்து தலைவர்களையும் சந்தித்துப் பேச ஜான்கெர்ரி திட்டமிட்டுள்ளார்.