காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் - நிபந்தனையற்ற போர் நிறுத்தம் தொடங்கியதால் அமைதி நிலவுகிறது
Aug 1 2014 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து வெளியேறாத நிலையில், காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதையடுத்து, போர் நிறுத்தம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம், காஸா மீதான தாக்குதலை கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது. மருத்துவமனைகள், பள்ளி வளாகங்கள் உட்பட பொதுமக்கள் வசிப்பிடங்களிலும், இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டுத் தாக்குதலில், ஏராளமான குழந்தைகள் உட்பட 1,427 பாலஸ்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 7 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து ஐ.நா. பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் போர் நிறுத்தம் பற்றி தெரிவித்துள்ளனர். இதையடுத்து போர் நிறுத்தம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நிவாரணங்கள் அளிக்கவும், மருத்துவ உதவிகளை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஐ.நா. வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.