எகிப்தில் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் : உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அதிபர் அல் சிசி உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி அஞ்சலி
Jul 22 2014 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எகிப்தில் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 22 ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அதிபர் அல் சிசி உட்பட ஏராளமானோர் இறுதி மரியாதை செலுத்தினர். முன்னதாக உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டின் தேசிய கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
எகிப்து நாட்டில் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 22 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், உயிரிழந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதிபர் அல் சிசி உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். பின்னர் ராணுவ மரியாதையுடன் வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
எகிப்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவந்த ஹோஸ்னி முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் துணையுடன் கடந்த 2012-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கிய முகமது மோர்சி அதிபர் பதவியை கைப்பற்றினார். ஆனால், ஒரு வருடம் கூட ஆட்சி நடத்த முடியாத நிலையில் மோர்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் அந்நாட்டு ராணுவம் அவரைக் கைது செய்து காவலில் வைத்தது. அவருக்கு துணையாக இருந்த இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கமும் ராணுவத்தால் பெரிதும் ஒடுக்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகளால் கொந்தளிப்பும், வன்முறையும் நிறைந்து காணப்பட்ட எகிப்தில், மே மாத இறுதியில் அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் தனது ராணுவத் தளபதி பதவியைத் துறந்த Abdel Fattah el-Sisi அதிபர் வேட்பாளராக களத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக ஹம்தீன் சபஹி என்ற இடதுசாரி வேட்பாளர் ஒருவர் மட்டுமே போட்டியிட்டார். இதில் பெரும்பாலானோர் எதிர்பார்த்தப்படி, அதிக வாக்குகளை பெற்று Sisi வெற்றி பெற்றார். ஆனால் சிசியின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத எகிப்தின் முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவு போராளிக் குழுவினர், அந்நாட்டு அரசுப் படைகளை குறி வைத்து, நாடு முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எகிப்துடன் சூடான், லிபியா ஆகிய நாடுகளை இணைக்கும் எல்லைப் பகுதியின் சோதனைச் சாவடி மீது ஆயுதமேந்தி வந்த சிலர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் எகிப்து ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அதிபர் அல் சிசி கடும் கண்டனம் தெரிவித்தார். பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எகிப்து முழுவதும் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.