நைஜீரியாவில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று, இன்றுவரை அவர்களை விடுதலை செய்யாமல் மறைத்து வைத்துள்ள பொகோ ஹராம் தீவிரவாதிகள் அந்நாட்டின் இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என கூறி வரும் பொகோ ஹராம் தீவிரவாதிகள், நைஜீரியாவில், தங்கள் மதக் கோட்பாடுகள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியைக் கொண்டுவர முயன்று வருகின்றனர். இதற்காக கடந்த 5 வருடங்களாக நைஜீரியாவில் அவர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
மேலும், நைஜீரியா முழுவதும் கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு, ஆள்கடத்தல் போன்ற கொடூர செயல்களையும் அரங்கேற்றி வருகின்றனர். இதில், கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நைஜீரியாவின், சிபோக் பகுதிக்குள் நுழைந்த பொகோ ஹராம் தீவிரவாதிகள், அங்கு தேர்வு எழுதிகொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர். மாணவிகள் கடத்தப்பட்டு சுமார் 4 மாத காலமாகியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரியாத நிலையில், நைஜீரியா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள், மாணவிகளை மீட்க நைஜீரிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனிடையே கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்கவண்டுமென்றால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் கூட்டாளிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், இல்லையென்றால் மாணவிகளை விற்றுவிடுவோம் என்றும் பொகோ ஹராம் தீவிரவாதிகள், நைஜீரிய அரசை மிரட்டினர். இதற்கு, துளியும் அடிப்பனியாத அந்நாட்டு அதிபர் குட்லக் ஜனாதன், பொகோ ஹராம் தீவிரவாதிகளை ஒழிக்க நைஜீரிய ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதனையடுத்து, அந்நாட்டு ராணுவத்தினருக்கும், பொகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் இடையே தலைநகர் அபுஜாவில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள 2 நகரங்களை பொகோ ஹராம் தீவிரவாதிகள் கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனி யாடி என்ற நகரில் உள்ள ஒரு கட்டிடத்தை பொகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த மாதம் ஆக்கிரமிக்க தொடங்கியது முதல் அங்கிருந்த மக்கள் அனைவரும் படிப்படியாக இடம்பெயர்ந்து வருகின்றனர். அரசாங்கத்துக்கு சொந்தமான முக்கிய கட்டிடத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கொடியை அதில் ஏற்றியுள்ளனர். மேலும் அங்கு புகைப்பிடித்த இருவருக்கு மரண தண்டனை விதித்து, தங்கள் கோர முகத்தை தீவிரவாதிகள் காட்டியுள்னர்.
எனினும் யோப் கவர்னரான இப்ராகிம் கெய்டம் இத்தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். ஆனால் தனக்கு தெரிந்தவரை புனி யாடியில் அரசுப்படையினர் ஒருவர் கூட இல்லை என்றும் பொகோ ஹராம் தீவிரவாதிகள் தங்கள் விருப்பப்படி அங்கு வந்து செல்வதாகவும் அவர் தெரிவித்தார். புனியாடியில் வசித்து வந்த மக்களில் பெரம்பாலானோர் தலைநகர் டமட்ரூவுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாக அவர் மேலும் கூறினார். ஏற்கனவே டாம்போ மற்றும் க்வோசா ஆகிய நகரங்களை போகோஹரம் தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டதாக ஐ.நா. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.