அமெரிக்க பத்திரிகையாளர் ISIS தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு, கண்டனம் : ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என ஒபாமா எச்சரிக்கை
Aug 23 2014 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க பத்திரிகையாளர் ISIS தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு, கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசைநிறுவப்போவதாக அறிவித்து, ஈராக் அரசுப் படைகள் மீது, ISIS தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், அந்நாட்டின் சிறுபான்மையின இஸ்லாமியர்களான குர்து மற்றும் யாசிடி இன மக்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர். குர்து மற்றும் யாசிடி இன மக்களை பாதுகாக்கும் வகையில், ISIS தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வெளி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, சிரியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபோலே என்பவரை ISIS தீவிரவாதிகள் கடத்திச் சென்று, அவரது தலையை துண்டித்து, கொடூரமான விதத்தில் படுகொலை செய்தனர். அதன் வீடியோ காட்சியை தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ஈராக்கில் அமெரிக்காவின் தலையீடு தொடருமானால், அந்நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ISIS தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபோலே தீவிரவாதிகளால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ISIS இயக்கம் ஒரு புற்றுநோய் என்றும், அவர்களது கொள்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒபாமா, உலகம் முழுவதும் உள்ள தங்கள் மக்களை காப்பாற்ற அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார். அமெரிக்கப் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் கண்டித்துள்ளார்.