அமெரிக்காவில் பிரதான கால்வாய் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பால் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து, ஒரே வெள்ளக்காடாக காட்சியளித்தது
Jul 31 2014 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் பிரதான கால்வாய் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பை அடுத்து, சுமார் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்தது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து, ஒரே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தண்ணீர் விநியோகிக்கும் முக்கிய குழாய் ஒன்றில் திடீரென வெடிப்பு உருவானது. நீண்ட நேரமாக அந்த குழாய் அடைக்கப்படாததால், அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து, வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலையில், ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் 2 பகுதிகளும் பாதுகாப்பு கருதி, மூட ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார், 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்ததால், அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. முக்கிய கால்வாயில் 30 அங்குல அளவுக்கு உடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், இரண்டு இடங்களில் ஏற்பட்ட இந்த உடைப்பு காரணமாக தண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், உடைப்பு ஏற்பட்ட பகுதியை விரைவில் அடைத்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அவர்கள் கூறினர். இதன் காரணமாக நீண்ட நேரமாக அந்த பகுதியில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும், தண்ணீர் வீணாக சாலையில் செல்வதை தடுக்கும் நோக்கில் செயல்பட்ட ஊழியர்கள், இதுதொடர்பாக தீவிர செயல்பாடுகளில் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியினை மேற்கொண்டனர். கலிபோர்னியா மாகாணம் ஆயிரக்கணக்கான கேலன் தண்ணீரை தெருக்களில் இதுபோல் இதுவரை வீணாக்கியது இல்லை என்று அந்நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.