தேர்தல் ஊழியர்கள் தொந்தரவு செய்யப்பட்டால் அப்கானிஸ்தானிற்கான உதவிகள் நிறுத்தப்படும் : ஐ.நா எச்சரிக்கை
Sep 16 2014 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் ஊழியர்கள் தொந்தரவு செய்யப்பட்டால் அப்கானிஸ்தானிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என ஐ.நா எச்சரித்துள்ளது. தேர்தல் ஊழியர்களுடன் தொடர்ந்து ஏற்பட்டு வந்த மோதல் காரணமாக ஐ.நா. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் துருப்புகள் அளித்த பாதுகாப்பில் அப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒடுக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேறும் முயற்சியை நேட்டோ துருப்புகள் தொடங்கியுள்ளன. அதேசமயம் அந்நாட்டின் புதிய அதிபர் பதவிக்கான தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு நடைபெற்றது. இதன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான அப்துல்லா அப்துல்லா முன்னணியில் இருந்ததாக அறிவிக்கப்பட்டார். பின்னர் ஜூன் மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவுகள் முன்னாள் நிதி அமைச்சரான அஷ்ரப் கனிக்கு ஆதரவாக இருந்தன.
இதனை ஏற்க மறுத்த அப்துல்லா, போலி வாக்குகள் கலந்துள்ளதாகப் பிரச்சினைகளைக் கிளப்பினார். இதனையடுத்து அமெரிக்கா தலையிட்டு ஐ.நா உறுப்பினர்கள் மேற்பார்வையில் தணிக்கைமுறையுடன் கூடிய மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடு செய்தது. இதிலும் தடங்கல்கள் ஏற்பட்டு இறுதி முடிவானது அஷ்ரப் கனிக்கு சாதகமாகத் தென்பட அப்துல்லா அப்துல்லா இதனை ஏற்க மறுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கை மேற்பார்வை பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா ஊழியர்களுடன், போட்டி வேட்பாளர்களின் தணிக்கை மேற்பார்வையாளர்கள் மோதல்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதன் காரணமாக தேர்தல் ஊழியர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யப்படுவார்களேயானால் அப்கானிஸ்தானுக்கான உதவிகள் நிறுத்தப்படும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.