சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்பணியால் கடைகளில் விரிசல் : பூமியில் 5 அடி கீழே இறங்கியதால் பரபரப்பு
Dec 8 2019 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், மெட்ரோ ரயில் திட்டப்பணியால், கடைகளில் விரிசல் ஏற்பட்டதுடன், பூமியில் 5 அடி கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தங்கசாலை முதல், திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோவில் சந்திப்பில், மூன்று கடைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டதுடன், பூமிக்குள் இறங்கியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே மெட்ரோ பணிகளால், ராட்சத குழாய்கள் அமைக்கும் பணியின் போது, பயங்கர சத்தத்துடன் இயந்திரங்கள் இயக்கப்படுவதால், நில அதிர்வு ஏற்பட்டு பொருட்கள் கீழே விழுந்து வருவதாக, மெட்ரோ ரயில் திட்ட மேலாளர்களிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது 3 கடைகளில் விரிசல் ஏற்பட்டதால், மெட்ரோ ரயில் கட்டுமான ஊழியர்களிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல், மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலை ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.