மாநில நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூல் மையம் அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Dec 5 2019 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாநில நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூல் மையம் அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கே.கே.நகரை சேர்ந்த இம்மானுவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, 4 வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தான் சுங்க வரி மையம் அமைக்க வேண்டும் - ஆனால் மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து விமானநிலையம் அருகில் உள்ள பரம்புப்பட்டி வரை 27 கிலோ மீட்டருக்குள் 3 சுங்க வரி மையங்களில், வாகனங்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படுவதாகவும், இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார். எனவே, 27 கிலோ மீட்டர் தூரத்தில் 3 சுங்க கட்டண மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் திரு.துரைசுவாமி, திரு.ரவீந்திரன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில நெடுஞ்சாலைகளில், ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு வரும் 11-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.