மாண்புமிகு அம்மாவின் லட்சியங்களை வென்றெடுத்திடவும், வீரம், விவேகத்தோடு பணியாற்றி துரோகிகள், தீயசக்திகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவித்திடுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சாதனைகளின் சிகரமாய், திராவிட இயக்கத்தின் மணிமகுடமாய், பன்னாட்டுத் தலைவர்கள் போற்றிய மாபெரும் தலைமையாய் திகழ்ந்த அம்மா அவர்கள் துயில்கொள்ளும் இப்புனித நினைவிடத்தில், தியாகத்தலைவி சின்னம்மாவின் நல்வாழ்த்துகளோடு, அம்மாவின் லட்சியங்களை வென்றெடுத்திட உளப்பூர்வமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அம்மா காட்டிய பாதையில் மக்களோடு நாம், மக்களுக்காக நாம் என்கிற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து பயணிக்க, அம்மாவின் தூய தொண்டர்களாகிய நாம் உறுதியேற்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவின் லட்சியங்களையும், கழகத் தொண்டர்களையும் பாதுகாக்க போராடும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் வீரத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றி, துரோகிகள், தீயசக்திகளை வீழ்த்தி, வெற்றிகளைக் குவிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அம்மா கட்டிக்காத்த இயக்கம், தற்போது சுயநலக்கூட்டத்தால் சிதைக்கப்பட்டு, உதிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அ.ம.மு.க எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு மீட்டெடுத்தே தீருவோம் என உறுதி ஏற்கப்பட்டது.
நீட் தேர்வு, காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் உரிமைகளில் ஏற்பட்டுள்ள அநீதி, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள், ஒட்டுமொத்த நிர்வாக சீர்கேடு போன்றவற்றில் நீதி கிடைக்கவும், மக்கள் நலத் திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள இந்நிலையை மாற்றவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழக உரிமைகள், தமிழ்மொழி மற்றும் தமிழக மக்களின் மேன்மை, இலங்கைத் தமிழர்களின் சுதந்திர வாழ்வு என்று அனைத்திற்கும் உரிமைக்குரல் எழுப்பிய பாதையிலேயே பயணித்து, மக்கள் நலனை பாதுகாக்க தொடர்ந்து போராட உறுதி ஏற்கப்பட்டது.
புதிய அரசியல் சரித்திரம் படைத்து, அம்மாவின் உண்மையான ஆட்சியை அ.ம.மு.க சார்பில் தமிழ்நாட்டில் அமைத்துக் காட்டுவோம் என்றும், அம்மா நினைவிடத்தில் சபதம் ஏற்கப்பட்டது.