கரூர் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் 3வது நாளாக இன்றும் நீடிக்கிறது வருமான வரி சோதனை - 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் பங்கேற்பு
Nov 17 2019 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டத்தில், கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் 3வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரைச் சேர்ந்த சிவசாமி என்பவர், கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். வெண்ணைமலையில் இதன் நிர்வாக அலுவலகம் உள்ளது. மேலும், சிப்காட், தண்ணீர்பந்தல் ஆகிய இடங்களில் கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் கொசுவலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம், சிவசாமியின் வீடு, கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் அலுவலகத்தில், 80-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. கொசுவலை நிறுவனத்தின் உரிமையாளர் சிவசாமியின் வீட்டில் 32 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அங்கு வருமான வரி சோதனை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. இரவு, பகல் என 40 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடிக்கிறது. இன்றைய சோதனையில் ஏதேனும் ஆவணங்கள், ரொக்கம் கைப்பற்றப்பட்டது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.