நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் கிராம மக்கள், பறவைகளுக்காக, பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடுகின்றனர். பறவைகளுக்கு இடையூறு என்பதால், பல ஆண்டுகளாக, பட்டாசுகளை தவிர்க்கும் கூந்தன்குளம் கிராமம் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம்...
நெல்லையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, கூந்தன்குளம் கிராமம். இங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு, சைபீரியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பல வகையான பறவைகள் வருகை தருகின்றன. கிரேன்கிரான், வக்ரா, ரெட்சங், வெள்ளை நாரை, அரிவாள் மூக்கன் என, பல்வேறு வகையான பறவைகள், கூந்தன்குளம் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வருகின்றன. கடந்த ஆண்டு வறட்சி நிலவியதால், பறவைகள் வரவில்லை.
வெளிநாட்டிலிருந்து சரணாலயத்திற்கு வரும் பறவைகள், மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்த பின்னர், சீசன் காலம் முடியும் நேரத்தில், தாயகம் திரும்பும். பறவைகள் வரத்தின்றி கடந்த ஆண்டு வெறிச்சோடிய கூந்தன்குளம் சரணாலயத்திற்கு, இந்த ஆண்டு, ஏராளமான பறவைகள் வரத் துவங்கியுள்ளன.
பறவைகளின் வருகை காலம், தீபாவளிப் பண்டிகை காலத்தை ஒட்டி வருவதால், கூந்தன்குளம் கிராம மக்கள், பட்டாசுகளை வெடிப்பதில்லை. தீபாவளி மட்டுமல்ல, திருவிழா காலங்களிலும், பட்டாசு வெடிக்க மறுக்கின்றனர். பட்டாசு சத்தம், பறவைகளுக்கு இடையூறாகவும், அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதால், சிறுவர்கள்கூட பட்டாசு வெடிப்பதில்லை.