விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு - இந்திய தந்தி சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
Sep 18 2019 7:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகள் எதிர்ப்பை மீறி விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்து, தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்திய தந்தி சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு, சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள் கைது செய்யப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.
இதேபோல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான சங்கங்களின் கூட்டமைப்பினர் இந்திய தந்தி சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும், இந்திய தந்தி சட்டம் 1885-ன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் இதற்கு அனுமதி வழங்கி வருகின்றனர். இதனால், இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் தந்தி சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஈரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, இந்திய தந்தி சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்.
இதேபோல் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், விவசாய சங்கம் சார்பில், விவசாயிகள் இந்திய தந்தி சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.