ஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது - தி.மு.க. மற்றும் 4 எம்.பி.க்கள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Sep 17 2019 9:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், ம.தி.மு.க.ம கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் திரு.சத்தியநாராயணன் மற்றும் திரு.சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது, தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.பி.கள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.