தமிழகம், புதுச்சேரியில் தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் : பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியாருக்கு மரியாதை
Sep 17 2019 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள் விழா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அ.ம.மு.க., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் விமரிசையாக கொண்டாடினர். இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் கு.ராமகிருட்டிணன் பங்கேற்று, பெரியாரின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு அமைப்பினர் சார்பில், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசு சார்பில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு, முதலமைச்சர் நாராயணசாமி, முதல்வரின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பிள்ளைத்தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, மாநில கழக செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.