குடிமராமத்துப் பணிகள் மிகவும் காலதாமதமாக தொடங்கப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு - மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடைக்கு வந்து சேருமா? என கவலை
Aug 20 2019 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் மிகவும் காலதாமதமாக குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து சேருமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு குடிமராமத்துப் பணிகள் மிகவும் காலதாமதமாக ஜூலை மாதமே தொடங்கப்பட்டன. இதையடுத்து, நாகை மாவட்டத்தில் 16 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆறுகளை தூர்வாருதல், மதகுகள் மறுகட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணை கடந்த வாரம் திறக்கப்பட்டு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், அந்த நீர் கடைமடைக்கு வந்து சேருமா? என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வந்து சேர்ந்தால் மட்டுமே ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பா சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை வேளாண்துறை அதிகாரிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.