சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, நெல்லை போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஏற்கெனவே கடந்த இரண்டு வாரங்களாக இடைவிடாமல் மழை பெய்தது. தற்போது அங்கு மழையின் தாக்கம் சற்று தணிந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற இடங்களிலும் சுற்றுவட்டார பகுதிகளான போரூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையும் இந்த தொடர்ந்து நீடிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், தாம்பரம், குரோம்பேட்டை, ஊரப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையம், கீழ்பெரும்பாக்கம், வழுதரெட்டி உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழையும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.