நீட் மசோதா நிராகரிப்பு சட்டப்பேரவைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு - நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே மீண்டும் மசோதா கொண்டு வர வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Jul 8 2019 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் மசோதா நிராகரிப்பட்டிருப்பது சட்டப்பேரவைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு விலக்கு குறித்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது குறித்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு 2017 ல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மத்திய அரசோடு சேர்ந்து மக்கள் விரோத எடப்பாடி அரசு, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த மிகப்பெரிய நாடகம் அம்பலமாகி உள்ளது என்றும் இது பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையின் மாண்புக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய தலை குனிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப்பட்டியலில் உள்ள கல்வி விவகாரத்தில் மத்திய அரசின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கை கூட்டாட்சி முறைக்கே சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது - எனவே, அனிதா உள்ளிட்ட மாணவச் செல்வங்கள் அநியாயமாக உயிர் விட்டதற்குப் பிராயசித்தமாக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மீண்டும் மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து, அதற்கான சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள திரு.டிடிவி தினகரன் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் ஒன்றுபட்டு நின்று நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.