திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Jan 7 2019 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் இடை தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ம் தேதி இடைத் தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
கஜா புயல் பாதித்த திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது சரியல்ல என்றும், இதனை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் திரு.டி.ராஜா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். இந்த மனு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சூழல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் பங்கேற்றன.
இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடை தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.