தமிழகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் : ஏராளமான குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள்
Nov 14 2018 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினம் திருச்சியில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மறைந்த பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சின்னஞ்சிறு குழந்தைகள் பல்வேறு வகையான பாடலுக்கு நடனம் ஆடியும், நேருவை போன்று உடை அணிந்தும் காட்சி அளித்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடிய குழந்தைகள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மகிழ்வித்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஜவஹர்லால் நேருவின் திருஉருவ படத்திற்கு பள்ளி மாணவிகள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பள்ளி மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதே போல, கிருஷ்ணகிரி புனித அன்னாள் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ண மிகு கலைகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சேலத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், குழந்தைகள் தினவிழா மற்றும் தமிழகப் பள்ளி கலைத்திருவிழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதையொட்டி, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ஆயிரத்து 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.