நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்கள் பள்ளியில், 1200 மாணவர்களும், பெண்கள் பள்ளியில் சுமார் 1300 மாணவிகளும் என, இரு பள்ளிகளிலும் சேர்த்து 2 ஆயிரத்து 500 பேர் பயின்று வருகின்றனர்.
நாமக்கல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், ராசிபுரம் - ஆட்டையாம்பட்டி இடையிலான பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பள்ளிகளில், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர், ஒலப்பட்டி, அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, மணக்காடு, அறமத்தாம் பாளையம், அனந்த கவுண்டம் பாளையம், பொன் பரப்பிபட்டி, செளதாபுரம், ஆர்.கொமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை,மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் மற்றும் அத்தனூரைத் தவிர பிற பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லை.
குறிப்பாக, கடந்த முறை, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் போட்டியிட்டு வென்ற தொகுதி, இந்த முறை சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா வென்ற தொகுதி எனக் கூறப்படும் ராசிபுரம் தொகுதியிலேயே, மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லாத அவலம், மிகுந்த வேதனைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
மாணவர்களின் பள்ளி நேரத்திற்கு ஏற்ப பேருந்துகள் இல்லாததால், தனியார் பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வர, மாணவர்களுக்கு, தினமும் 15 ரூபாய் செலவாகிறது. பள்ளி பயிலவே முடியாத ஏழ்மை நிலையில் உள்ள பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு இந்த பேருந்து கட்டணம் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனால், மாணவர்கள், தினந்தோறும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்களுக்கு, அரசு, போதிய பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாண்புமிகு அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து கடைபிடித்து வருவதாக, வாயளவில் மட்டும் கூறிவரும் பழனிசாமி அரசு, இந்த பள்ளிகளில் பயிலும், ப்ளஸ் 1, ப்ளஸ் 2, மாணவ, மாணவிகளுக்கு, இதுவரை, அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கவில்லை. இதனால் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.