தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலி 380 ரூபாயை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 225 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோ் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மின் வாரிய அலுவலகம் முன்பு மின் தொழிலாளர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 800 ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் நாகர்கோவிலில் பேருந்து நிலயம் செல்லும் பிரதான சாலையில்
ஒருமணி நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
அஞ்சல் துறை ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் கூட்டு போராட்ட குழு சார்பில் திருச்சியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும், பணி மாறுதலில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பஷீராபாத் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவியை, கழிவறையில் பூட்டிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பள்ளி முடிந்து மாணவி வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடியுள்ளனர். பின்னர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள கழிவறையை திறந்து பார்த்த போது, மாணவி உள்ளே இருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கஸ்பா பகுதியில், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை
முற்றுகையிட்டனர். அப்போது, அதிகாரிகள் தரக்குறைவாக பேசி வெளியேறும்படி நிர்பந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழியில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஜவுளி கடை நடத்தி வரும் சின்னப்பா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.