திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர், தனது ஓவியத் திறமையால் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். தேங்காய் ஓட்டில் 18 சித்தர்களை சித்திரங்களாகத் தீட்டி பாராட்டு பெற்றுள்ளார். கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக ஓவியம் கற்றுத்தரும் இந்த ஓவியக் கலைஞன் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...
உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றையே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும், என்றார் தமிழறிஞர் மு.வரதராசனார்... ஆனால், கற்றதுக்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறைக்குள் தன்னை விரிவுப்படுத்திக் கொண்டது கலை... மனிதம் மனச்சுமையால் கட்டுண்டு கிடக்கும் போது,அந்த மனச்சுமைகளை குறைப்பதற்கான களமாக இருப்பது கலைகள்...
கலைகளிலே அவள் ஒவியம் என காதலியை நோக்கி கவிதை கணை வீசினான், திரையுலக கம்பன் கண்ணதாசன்...
ஒவியம்... தூரிகை அனுப்பும் தூது... வெள்ளைத் தாளில் நட்டு வைக்கப்படும் நந்தவனம்... காகிதக் காடுகளில் தூவப்பட்ட கற்பனை விதை... அழகை மேலும் அழகுபடுத்தும் ஒப்பனைக் கலை... ஆயிரம் பக்கங்கள் சொல்ல வேண்டியதை அரை வினாடியில் உணர்த்தி விடும் ஒர் அழகான ஒவியம்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறையில் வசித்து வருபவர் சபரிநாதன்... அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியாரகப் பணியாற்றி வரும் இவர், சாக்பீஸ் மூலம், பல ஒப்பற்ற ஓவியங்களைத் தீட்டியுள்ளார்... தற்போது, 18 சித்தர்களின் ஓவியங்களை, சிறுசிறு தேங்காய் ஓட்டில் வரைந்து சாதனை படைத்துள்ளார்...
கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு ஓவியம் பயிற்றுவிக்கும் ஒப்பற்ற பணியை சபரிநாதன் செய்து வருகிறார்... இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர்.
ஆனால், மகன் சபரிநாதனின் ஓவிய திறமைக்குக் கிடைக்கும் பாராட்டு போதுமானதல்ல என அவரது தாயார் ஆதங்கப்படுகிறார்... பகுதிநேர ஓவியரான தனது மகனை, முழுநேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்ற அரசுப்பணி வழங்க வேண்டும் என்பது அன்னையின் கோரிக்கை...
எந்த கலைஞனுக்கும் உற்சாக உணவு வழங்கப்பட்டால் தான், அவனது கற்பனைத் திறன் விரியும்... அவன் புகழ் தெரியும்... எண்ணத்தில் உதிக்கும் கற்பனையை, கண்ணைக் கவரும் ஓவியமாக்கி வரும் சபரிநாதன் என்ற கலைஞனின் கையில், சாதாரண சாக்பீஸ் கூட கவிதையாய் மலர்கிறது...