தஞ்சை, திருச்சி பகுதிகளில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு - பதற்றம் காரணமாக போலீசார் குவிப்பு
Sep 24 2018 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கவராப்பட்டு கிராமத்தில், 10 அடி உயர பெரியார் சிலைக்கு, நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் இன்று அதிகாலை செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கவராப்பட்டு கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, ஒரத்தநாடு - மன்னார்குடி சாலையில் திராவிடர் கழகத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே சாலை மறியல் மற்றும் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், திருச்சி அருகே சோமரசம்பேட்டை கடை வீதியில் உள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலையை மர்ம நபர்கள் இன்று அதிகாலை சேதப்படுத்தியுள்ளனர். சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள பெரியார் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.