சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கடைமடைக்கு காவிரி நீர் வராததை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில், கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். அவர்களை உசிலம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் புரட்சி பாரதம் கட்சியினர் கழுத்தில் தூக்கிட்டு நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருங்கல்பாளையம் காந்திசிலை முன்பு இருசக்கர வாகனங்களில் அமர்ந்தபடி, கழுத்தில் தூக்கிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொக்காளக்குடி கிராமத்தில் உள்ள குளம் குடிமராமத்து பணியின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. அரசால் அனுமதிக்கபட்ட 3 அடி ஆழத்தை விட கூடுதலாக 12 அடி ஆழம் வரை தோண்டி அடியில் உள்ள மணலை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களால், சாலைகளும், குடிநீர் குழாயும் பழுதடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணை நான்கு முறை முழு கொள்ளளவை எட்டியும், கடைமடை பகுதியான அடப்பாற்றில் தண்ணீர் திறந்து விடாததால், பாதிக்கப்பட்ட உம்பளச்சேரி, பிராந்தியங்கரை, வட்டாக்குடி உள்ளிட்ட பத்து கிராம விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, நீர் இன்றி கருகிய பயிர்களை பார்வையிடச் சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் நகராட்சி எல்லையில் அமைந்துள்ள, நாகல்கேணி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி துவங்கப்பட்டுள்ள அரசு மதுபானக்கடையை உடனடியாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள், மதுபானங்களை சாலையில் கொட்டி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.