நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை எச்சரிக்கை - அடுத்த 2 நாட்களுக்கு அந்தமான் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தல்
Aug 14 2018 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. பாலச்சந்திரன், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில், நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழையோ அல்லது மிகக் கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடக்கு, மத்திய வங்கக்கடல், அந்தமான் பகுதிகளுக்கு அடுத்த 2 தினங்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 18 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 17 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 10 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.