காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். மணல் திருட்டு காரணமாக, ஆற்றின் கரைகள் பலமிழந்து காணப்படுவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால், சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி உபரி நீர் அப்படியே காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து நிரம்பியுள்ளதால், அணையிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் மும்கொம்பு அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 4 ஆயிரத்து 107 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 79 ஆயிரத்து 324 கன அடி வீதமும் கால்வாய்களில் 1 ஆயிரத்து 300 கன அடி வீதமும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரத்து 526 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 503 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் 3 ஆயிரத்து 4 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் பாயும் நீரை போலவே கொள்ளிடத்திலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் வரும் வெள்ளத்தில் குளிக்கவோ, ஆற்றுக்குள் ஆடு, மாடுகளை மேய்க்கவோ வேண்டாம் என்று, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பாதிப்புகளை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரி நீர், நாளை நாகை மாவட்டத்திற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மணல் திருட்டு காரணமாக, ஆறுகளின் கரைகள் பலமிழந்து காணப்படுவதால், கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆற்றின் கரையோரத்தில் உள்ள கொள்ளிடம் ஒன்றியத்தின் முதலைமேடு, நாதல்படுகை உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தின் தெற்குபகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட தாதம்பாளையம், வெள்ளியணை, உப்பிடமங்களம், வீரராக்கியம், பஞ்சப்பட்டி, உடையாபட்டி, மாவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. இது போன்று வெள்ளக் காலங்களில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு தண்ணீர் எடுத்துவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.