விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Jul 20 2018 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியில் 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய அளவிலான மாநாடு, ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில், அச் சங்கத்தின் அகில இந்திய தலைவர் Dr. அசோக் தவாலே, சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அகில இந்திய கமிட்டி உறுப்பினர்களுடன், கேரள மின் துறை அமைச்சர் மணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டை ஒட்டி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. காந்தி சிலை அருகே இருந்து புறப்பட்ட பேரணியை, அச் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வரதராஜன் தொடங்கி வைத்தார். இந்த பிரம்மாண்ட பேரணியில் விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வேளாண் துறை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமலாக்க வேண்டும், காவிரி, வைகை, குண்டாறு, வைப்பாறு இணைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும், அச்சங்கோவில், பம்பையாறு இணைந்த அழகர் அணை திட்டத்தை செயல் படுத்த வேண்டும், நியாய விலைக் கடைகளில் உணவு பொருட்களை சீரான முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு சென்ற பேரணி, தெற்கு காவல் நிலையம், எல்.ஐ.சி அலுவலகம், காந்தி சிலை, சத்திரப்பட்டி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மாநாடு திடலில் நிறைவடைந்தது.