நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை : ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கின
Jul 20 2018 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கின.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கூடலூர் பஜார் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பொன்னானி பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததில் வாழை மரங்கள் சேதமானது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, சூரங்குடி பகுதியில் வீசிய சூறைக் காற்றால், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வாகை மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. மேலும், மின்கம்பங்களும் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து மரத்தை அகற்றினர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், திருக்கனூர், மதகடிப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.