கழக நிர்வாகி செ.சரவணன் மீது காவல்துறையை ஏவி, பொய்வழக்கு புனைந்து கைது செய்த எடப்பாடி பழனிசாமிக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி திகனரன் கடும் கண்டனம் - கழகத்தினரின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் ஆட்சியாளர்களின் செயல்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது எனவும் எச்சரிக்கை
Jun 22 2018 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. செ. சரவணன் மீது காவல்துறை மூலம் பொய்வழக்கு புனைந்த எடப்பாடி பழனிசாமிக்கு, கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. செ.சரவணன் மீது பொய்வழக்கு புனைந்த காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நள்ளிரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை, வீட்டின் கதவை உடைத்தும், மின்சாரத்தை துண்டித்தும் கைது செய்தது கடுமையான அடக்குமுறையை காவல்துறை பின்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறையை அடாவடியாக ஏவி, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், கழகத்தினரின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் ஆட்சியாளர்களின் செயல்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது என்றும் தெரிவித்துள்ளார். பொய்வழக்கு புனையும் போக்கையும், அநாகரிகமான செயலையும் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இந்த கைது நடவடிக்கைகளும், அதிகார மிரட்டல்களும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மக்களுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.