மக்கள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப் பயணமாக, திருநெல்வேலிக்கு வருகை தந்த, கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழகத்துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு, மாநகர் முழுவதும் இளைஞர்களும், பெண்களும், கழகத் தொண்டர்களும் திரளாகக் கூடி நின்று மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி மாநகரில், 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வை, நெல்லை மாநகர மாவட்டச் செயலாளர் திரு. கல்லூர் வேலாயுதம் தலைமையில், தாழையூத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தும், வாத்தியக் கருவிகள் இசைத்தும் ஏராளமான கழகத் தொண்டர்கள் திரண்டு நின்று, திரு. டிடிவி தினகரனை உற்சாகமாக வரவேற்றனர். இதனையடுத்து, அங்கு, கழகக் கொடியை திரு. டிடிவி தினகரன் ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பாப்புலர் வி. முத்தையா, புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சொக்கலிங்கம், கழக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திரு. இசக்கி சுப்பையா, திரு. மைக்கேல் ராயப்பன், திரு. பரமசிவ ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கரையிருப்பு பகுதிக்கு வருகை தந்த திரு. டிடிவி தினகரனுக்கு, செண்டை மேளம் வாசித்தும், பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்தும், உற்சாக வரவேற்பு அளித்தனர். பெருமளவு குழுமியிருந்த தொண்டர்களுக்கு மத்தியில், கழகக் கொடியினை திரு. டிடிவி தினகரன் ஏற்றினார்.
தச்சநல்லூர் வழியாக பயணித்த திரு. டிடிவி தினகரனுக்கு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணத்தினை வெளிப்படுத்தும் விதமாகவும், விரைவில் தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றத்தினை உணர்த்தும் வகையிலும், "டிடிவி எனும் நான் - விரைவில்" என்ற வாசகம் பொதிந்த டி-ஷர்ட்களை அணிந்து இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடையார்பட்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நெல்லை சீமை முழுவதும் மேளதாளங்கள் முழங்க, ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் சாலையின் இருமருங்கிலும் பெருந்திரளாகக் கூடி நின்று, உற்சாக வரவேற்பு அளித்தனர்.