தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற பொதுமக்கள் மீது, மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி அரசின் போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் வீடுகளுக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அவர் வழங்கினார்.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற பொதுமக்கள் மீது, எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரஞ்சித், கந்தையா ஆகியோரின் வீடுகளுக்கு திரு. டிடிவி தினகரன் நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அந்தக் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கார்த்திக், மணிராஜ், எஸ்.எம்.எஸ். தங்கதுரை, செல்வி. ஸ்நோலின், திருமதி. ஜான்சிராணி, காளியப்பன், கிங்ஸ்டன், அந்தோணி செல்வராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் திரு. டிடிவி தினகரன் நேரில் ஆறுதல் தெரிவித்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற திரு. டிடிவி தினகரன், அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
போலீசார் தாக்கியதால் படுகாயமடைந்த பிரின்ஸ்டன் என்பவருக்கு ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார். இதையடுத்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய டிடிவி தினகரன், பிரின்ஸ்டனுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கழக அமைப்புச் செயலாளர் திரு. S.V.S.P. மாணிக்கராஜா, திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பாப்புலர் முத்தையா, தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஹென்றி, கழக அம்மா பேரவைச் செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு. பரமசிவன் அய்யப்பன், திருமதி. சசிகலா புஷ்பா எம்.பி., சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. உமாதேவன், கழக இலக்கிய அணிச் செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, விளாத்திகுளம் திருமதி. உமாமகேஸ்வரி, சாத்தூர் திரு. சுப்பிரமணியன், ஒட்டப்பிடாரம் திரு. சுந்தரராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு. டிடிவி தினகரன், மக்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும், முதலமைச்சர் ஏன் இன்னும் தங்களை சந்திக்க வரவில்லை என்று பொதுமக்கள் கொந்தளிப்பதாகவும் திரு. டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.