தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
May 24 2018 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் அரங்கேற்றப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 நீதிபதிகள் முன்னிலையில், 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். பொதுமக்களை கொந்தளிக்கும் சூழ்நிலைக்கு மாற்றிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி அண்ணாநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காளியப்பன் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டின்போது போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த செல்வசேகர் என்பவர், பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த தமிழகக் காவல்துறை தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், எடப்பாடி அரசுக்கு உதவுவதற்காக மத்திய துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். எனினும் பொதுமக்கள் சில இடங்களில் கூடுவதால் பதற்றம் நீடிக்கிறது.