தூத்துக்குடியில் மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞர் காளியப்பனின் உடலைப் பார்த்து காவல்துறையினர் மனசாட்சியின்றி நடந்துகொண்ட வீடியோ காட்சி
May 24 2018 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் மீண்டும் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞர் காளியப்பனின் உடலைப் பார்த்து, காவல்துறையினர் மனசாட்சியின்றி நடந்துகொண்ட வீடியோ காட்சி வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போர்க்கொடி தூக்க, அவர்களை கலைக்க, காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால், தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அதைத் தொடர்ந்து, அண்ணாநகர் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், காளியப்பன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே குண்டு துளைத்து பலியானார். இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், காளியப்பனை சுட்டுக்கொன்ற பிறகு, போலீசார் நடந்துகொண்ட விதம் குறித்து நியூஸ் மினிட் செய்தியாளர் அனா ஐசக், தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் காவலர் ஒருவர், தான் வைத்திருந்த லத்தி கம்பால் காளியப்பனை தொட்டு "ஏய் ரொம்ப நடிக்காதே போ" என்று கூறுகிறார். போலீசாரின் இந்த மனசாட்சியற்ற செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.