தூத்துக்குடியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக கொடூரமான ஓர் ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரங்கேற்றியுள்ள மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி அரசையும், அதற்கு துணைபோகும் காவல்துறையையும் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அக்கட்சியினர், எடப்பாடி பழனிசாமியை பதவி விலக கோரி கோஷங்களை எழுப்பினர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரின் அராஜக செயலை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பட்டன.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழக மக்கள் மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய - மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. கோ. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற ஏராளமானோர், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மன்னார்குடி பெரியார் சிலை முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி முழக்கங்கள் எழுப்பட்டன.
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக மக்கள் மேடை அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பாலக்கரையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்லைட், மீத்தேன் போன்ற மக்கள் விரோத திட்டங்களை உடனடியாக தடை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பட்டன. இதில் வழக்கறிஞர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் அம்பேத்கர் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காவல்துறையை கண்டித்து தஞ்சையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை, போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் தஞ்சை - கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஈரோடு மாவட்டம் மரவபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் இணைந்து, தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். இதில் பங்கேற்ற ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான எடப்பாடி அரசையும், ஏவல்துறையாக செயல்படும் காவல்துறையையும் கண்டித்து போராட்டம் வலுத்து வருகிறது.