நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்த சி.பி.எஸ்.இ.க்கும், சரிவர கையாளாத மத்திய அரசுக்கும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் - நீட் தேர்வு நடைமுறை அநீதியாக உள்ளதென்றும் வேதனை
Apr 21 2018 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்த சி.பி.எஸ்.இ.க்கும், சரிவர கையாளாத மத்திய அரசுக்கும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை அடியோடு சிதைக்கும் நீட் தேர்வு ஒரு அநீதி என்று நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சூழலில், நீட் தேர்வின் நடைமுறை என்பது அதைக் காட்டிலும் அநீதியாக உள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பத்தில், தேர்வு எழுதும் மையங்களுக்கான 3 விருப்பங்கள் கொடுக்கப்பட்டபோதிலும், பல மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த 3 விருப்ப மையங்களையும் தாண்டி வேறு பல மாநிலங்களின் தேர்வு மையத்தை சி.பி.எஸ்.இ. ஒதுக்கீடு செய்துள்ளது என்ற செய்தி நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. இதனை மாற்றக்கோரி மாணவர்கள் விண்ணப்பித்தபோதிலும், இது கணினி மயமான தேர்வு என்று சி.பி.எஸ்.இ. சொல்லி உள்ளது முற்றிலும் முறையற்றது என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சார்ந்த பல மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதால், அம்மாணவர்கள் பெற்றோர்களோடு 2 நாட்களுக்கு முன்னரே அம்மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்று, தங்கி தேர்வு மையத்தை அடையாளம் காண்பதென்பது அவர்களுக்கு பெரும் சிரமத்தையே ஏற்படுத்தும். மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள் முதற்கொண்டு ஏதோ அந்நிய நாட்டிற்கு சென்றதுபோல், பல கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. விதித்திருப்பது, மாணவர்கள் தேர்வு மையத்திற்கு உள்நுழைவதற்கு முன்பே அவர்களை மன உளைச்சலுக்கு உண்டாக்கும் செயல்- இதனால் தேர்வில் சரியான கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படுகிறது என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அலட்சிய போக்கை கையாண்ட காரணத்தினால், தமிழகத்தைச் சார்ந்த பல மாணவர்கள் இத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் உள்ளனர்- மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழக மாணவர்களை பழனிசாமியின் அரசு கை கழுவி விட்டது என்பதுதான் உண்மை - நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள மத்திய அரசுக்கும், தேர்வு முறைகளையும், தேர்வு மைய ஒதுக்கீட்டையும் சரிவர கையாளாத சி.பி.எஸ்.இ.க்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.