சிறுமி ஆசிஃபா கொலைக்கு நீதி கேட்டு தமிழகத்தில் தொடரும் போராட்டம் : குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தல்
Apr 21 2018 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் குழந்தை ஆசிஃபா கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்த கோஷங்களை எழுப்பினர். இதில் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.
ஆஷிபா கொலைக்கு நீதிகேட்டும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டணை வழங்கிட வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று கண்டண முழக்கமிட்டனர். குற்றவாளிகளுக்கு அரபு நாடுகளில் தண்டணை வழங்குவதுபோன்று சுட்டு மரணத்தண்டணை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டன ஆர்பாடடத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, சிறுமியின் கொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஏராளமான அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கும் விதமாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கும்பகோணத்தில் பழைய மீன் மார்க்கெட் அருகே நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், ஆசிஃபாவை கொலை செய்த கயவர்களை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுமி ஆசிஃபா கொல்லப்பட்டதற்கு பா.ஜ.க.வினர் தான் காரணம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். கண்டன ஆர்ப்பாட்ட முடிவில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளை இணைத்து மனித சங்கிலியாக நின்று மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதுடன், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.