தமிழக அரசின் விலையில்லா வேட்டி - சேலைகள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து ரூ.5 கோடி மோசடி : கூட்டுறவு சங்க மேலாளர் கைது
Apr 20 2018 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் விலையில்லா வேட்டி - சேலைகளை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து 5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சென்னிமலை கூட்டுறவு சங்க மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இயங்கி வரும் சென்னிமலை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில், முகாசி பிடாரியூரைச் சேர்ந்த திரு. செந்தில்குமார் என்பவர், மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த சங்கத்தின் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உற்பத்தி செய்யப்பட்ட தமிழக அரசின் விலையில்லா வேட்டி - சேலையை ஐந்து கோடியே 32 லட்சம் ரூபாய்க்கு வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல்துறை உதவி இயக்குநர் திரு. பிச்சைமுத்து, வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமாரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள வங்கியில் ஆடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ராமமூர்த்தி, 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் அருகே இருந்த கடைக்கு சென்று திரும்பிய அவர், பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில், உணவு அருந்திக் கொண்டிருந்த பெண்ணின் கைப்பயை மர்ம நபர் திருடிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, புதுச்சேரியில், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, அதன்மூலம் பலரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட பல்கலைகழக ஊழியர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 31 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகை, கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மோசடி தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.