மாண்புமிகு அம்மா அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழகத்தை, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியினர் அதலபாதாளத்தில் குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா தயவால் உயர்பதவியை பெற்ற இந்த துரோக கும்பல், ஓராண்டு சாதனை என தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். நீட் தேர்வு, காவேரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்னைகளில் செய்த துரோகத்தாலும் சந்திசிரிக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாலும், தமிழக மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி உண்மை.
தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த மாண்புமிகு அம்மா எண்ணற்ற நலத்திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்.
அவரது மறைவுக்குப் பிறகு ஆட்சியையும், கழகத்தையும் கட்டிக்காத்த கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் தயவால் ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி, சுயலாபத்திற்காக ஓ.பி.எஸ். உடன் கைகோர்த்தார்.
தங்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுவிடுவோம் என அஞ்சி, மத்திய அரசுக்கு அடிபணிந்து, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
மாண்புமிகு அம்மா கடுமையாக எதிர்த்துவந்த நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதித்தனர். விளைவு, தமிழகத்தில் ஏராளமான மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பை இழந்தனர். இதனால், அனிதா எனும் அரும்பு மலராமலேயே கருகியது. ஒப்பாரியும், ஓலமும் தமிழகம் முழுவதிலும் எதிரொலித்தது. குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல், துரோக செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியினர்.
நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்டு வரும் சர்க்கரை விலையை உயர்த்தி, அத்தியாவசியப் பொருட்களை வழங்காமல் அன்னாடங்காச்சிகளை அலைக்கழித்தனர். உளுந்து, துவரம்பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் நிறுத்தப்பட்டு நாள்தோறும் மக்கள் வெறுங்கையோடு திரும்பினர்.
எல்லாவற்றுக்கும் மேலாக பேருந்து கட்டணத்தை 100 சதவீதமாக உயர்த்தியபோது, கொதித்தது தமிழகம். போராட்டங்களும், முழக்கங்களும் அன்றாட நிகழ்வுகளாகின.
இது ஒருபுறம் இருக்க, நாள்தோறும் மக்கள் வெளியில் நடமாட முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தி, சட்டம்-ஒழுங்கை சந்திசிரிக்க வைத்துள்ளதுதான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நிர்வாகத்தின் ஓராண்டுகால சாதனை. தாலி சங்கிலி பட்டப்பகலில் கயவர்களால் பறிக்கப்பட்ட சம்பவங்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மீது தாக்குதல், மாணவிகளை கத்தியால் குத்தியும், அமிலம் வீசியும் தாக்கும் நிகழ்வுகள் என அடுக்கடுக்கான சமூக அவலங்கள் தான் இவர்கள் செய்த சாதனையின் உச்சம்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரிமேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்காமல் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கும் வரலாற்று துரோகத்தை இந்த கும்பல் செய்து வருகிறது. இவர்கள் வீட்டுக்குச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே தமிழக மக்களின் மவுனமொழி...