தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இபிஎஸ் நிர்வாகத்தின் தவறான கொள்கையை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேளாண்மைத்துறையில் பணியிடங்களை குறைத்து, வேளாண் அலுவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து, திருச்சி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வேளாண் அலுவலர்கள், கள அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மதுரையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் போதகர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிறிஸ்தவ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிறிஸ்தவ அமைப்பினர், போதகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ராமர் படம் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் எதிரே அனைத்துக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் கிறிஸ்தவ பேராலயத்தில் வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ ஆலய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு, ரத யாத்திரைக்கு அனுமதி உள்ளிட்டவற்றை கண்டித்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் கழகத்தினர், பேருந்துகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத உணர்வுகளைத் தூண்டும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
புதுக்கோட்டையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வேளாண்மைத் துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், சாலை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.