தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்கு அளிக்ககோரி, திருச்சியில் அனைத்து மாணவ இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திராவிடர் கழக மாணவரணி ஒருங்கிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மாணவர் அணிகளும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், சமூக நீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாணவரணி சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் பேருந்துநிலையம் பகுதியில், திருவள்ளூர் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த நீரவ் மோடி மற்றும் அவருக்கு துணை நிற்கும் பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிலிண்டர் மானியம்த்தை ரத்து செய்ததாக கூறி மக்களை ஏமாற்றி வரும் பா.ஜ.க. அரசை கண்டித்தும், விவசாயிகளின் விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரியும், கண்டன கோஷங்களை எழுப்பி இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தில் தடை செய்யப்பட்ட தனியார் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை, மீண்டும் செயல்பட அனுமதி அளித்ததை கண்டித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பாரதி நகரில், உள்ள பழமையான விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான கோவில் தெப்பகுளத்தில் போதிய தண்ணீர் இல்லாமல், போதிய பராமரிப்பு இல்லாமலும், இருந்தது. இந்நிலையில் கோவில் குளத்தில் கட்டட பணிகள் நடைபெறுவதை கண்ட மக்கள், இது குறித்து விசாரித்த போது, போலியாக பத்திரபதிவு செய்திருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அவர்கள், கோவில் குளத்தின் படிகளுக்கு பூஜைகள் செய்து, தூர்வாரியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில், உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே, குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர் ஏரியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு மாநில காவல் துறையினரும் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முறையான CBI விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல் துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மானவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர் நிரவ் மோடி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மேற்கு முகப்பேர் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்து கொண்டு உடனடியாக தொழிலதிபர் நிரவ் மோடியை கைது செய்யவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.