நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : மத்திய அரசைக் கண்டித்து முழக்கம்
Feb 22 2018 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசைக் கண்டித்து, அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால், மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் கண்டனக்குரல்கள் வலுத்துள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. கும்பகோணத்தில் சமூக நீதி பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டனர்.
இதேபோல், ஈரோட்டிலும் சமூக நீதி பாதுகாப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் சட்ட மசோதாக்களுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கக் கோரி, தஞ்சாவூரில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர் அமைப்பினருடன், பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டனர்.