நாகையில் வேதாரண்யம் அருகே உப்பளங்களில் உப்பு உற்பத்திக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடக்கம்
Jan 21 2018 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள உப்பளங்களில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து அதிக அளவில் உப்பு உற்பத்தி நடைபெறுவது வேதாரண்யம் ஆகும். அப்பகுதியையொட்டிய அகஸ்தியம் பள்ளியில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் நீரில் மூழ்கிய உப்பளங்களில் தற்போது தண்ணீர் வடிந்திருப்பதையடுத்து, உப்பு உற்பத்திக்கு அவை தயாராகி வருகின்றன. மழையால் சேதமடைந்த பாத்திகளை சீரமைத்தல், வரப்புகளை உயர்த்துதல் போன்ற பணிகளில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக களிமண் கொண்டு பாத்திகளை அமைக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக வேலையின்றி இருந்த தங்களுக்கு தற்போது முழுநேர பணி கிடைத்திருப்பதாக உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
பாத்தி அமைக்கும் பணிகள் முடிந்த 2 வாரங்களில் உப்பு எடுக்கும் பணிகள் தொடங்கும் என உப்பள உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு டன் உப்பு 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை தற்போது விலை போவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.