ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும் அங்கு நிலவும் அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்ப்பதே தமது முதல் பணி : கழக துணைப் பொதுச் செயலாளரும், கழகத்தின் வெற்றி வேட்பாளருமான டிடிவி. தினகரன் பேட்டி
Dec 17 2017 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும் அங்கு நிலவும் அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்ப்பதே தமது முதல் பணியாக இருக்கும் என கழக துணைப் பொதுச் செயலாளரும், கழகத்தின் வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது திரு.டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் அரசின் மோசமான நிர்வாகத்தால் குடிநீர் பிரச்னை, பழுதடைந்த சாலைகள், சாக்கடை நீர் வெளியேற்றம் போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலில் வெற்றிபெற்றதும் இவற்றை தீர்ப்பதே தனது தலையாய பணியாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் இந்த தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது தனது அடுத்த பணி என்றும் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை தமிழக முதலமைச்சரோ, அமைச்சர்களோ நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என கூறினார். இந்த இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சின்னத்துறை கிராமத்திற்கு, தான் நேரில் சென்று மீனவர்களை சந்தித்ததாகவும்
திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
இதேபோல், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மீனவர்களின் பிரச்னையைத் தீர்க்க தம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார். மக்களோடு மக்களாக நின்று அவர்களது பிரச்னையை தீர்த்து வைப்பேன் என்றும் திரு.டிடிவி தினகரன் உறுதிபடக் கூறினார்.