போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரி சோதனையை அம்மாவிற்கு களங்கம் விளைவிக்கப்பட்ட செயல் : சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கண்டனம்
Nov 18 2017 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனையை, அம்மாவிற்கு களங்கம் விளைவிக்கப்பட்ட செயலாகவே கருதுவதாக சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து திரு. சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை என்றும், வருத்தமளிப்பதாக உள்ளதென்றும் தெரிவித்துள்ளார். மாண்புமிகு அம்மா இறந்த பிறகு, அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை வரலாற்றில் இதுவரை இல்லாத நடைமுறை என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார். மாபெரும் தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட மாண்புமிகு அம்மா இறந்து முதல் ஆண்டு நினைவு தினம் நெருங்கும் நேரத்தில், அவருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகவே இந்த நள்ளிரவு சோதனையை பார்ப்பதாகவும் திரு. சரத்குமார் தெரிவித்துள்ளார். கட்சி சார்ந்த தொண்டர்கள் மட்டுமல்லாது, மாண்புமிகு அம்மாவை வெகுவாக நேசித்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள திரு. சரத்குமார், தேசிய அளவில் புகழையும், பெருமையையும் பெற்று நீண்டகாலம் பொது வாழ்விலும், முன்னேற்ற பாதையிலும் சென்று கொண்டிருந்த தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றி மக்களின் அன்பையும், அபிமானத்தையும் பெற்றிருந்த தலைவரது போயஸ்தோட்ட இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை, மாண்புமிகு அம்மா மேல் மதிப்பு கொண்டிருக்கும் மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறதென மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.